Tuesday, 30 January 2018

மனிதர்கள் பல வகை!

மக்கள் நலன் பேணுதல்!
##############
அரசர் ஒருவர் தனக்கு உதவியாக தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு சில  இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக
குரு ஒருவரிடம் அனுப்பி வைத்தார். குரு அவர்களில் மூன்று பேரை தேர்ந்தெடுத்து  சில வருடங்கள் கல்வி மற்றும் பல கலைகளை கற்று கொடுத்தார். பின் குரு அவர்களை அழைத்து உங்களுக்கு அனைத்தும் கற்று கொடுத்து விட்டேன். இனி நீங்கள் அரசரிடம் போகலாம் என்றார். மாணவர்கள் மூவரும் அரசரைப் பார்க்க கிளம்பினர்.சிறிது தூரம் சென்றதும் வழியில் இந்த ஓரத்தில் இருந்து மறு பக்கம் வரை முட்கள் பரவி கிடந்தது. இதை பார்த்த இளைஞர்களில் ஒருவன் பின்னால் போய் ஒரே ஓட்டமாக ஓடி வந்து முட்களை தாண்டி அந்தப் புறம் குதித்து விட்டான்.
இரண்டாவது இளைஞன்  பாதையின் ஒரு ஓரமாக போய் அதில் இருந்த சிறு இடை வெளியில் அடிமேல் அடி வைத்து அந்தப் பக்கம் போய் விட்டான்.
மூன்றாவது இளைஞன் பார்த்தான்.நாமும் தாண்டி போனால் மற்ற ஜனங்கள் பாதிக்கப் படுவார்கள். சிறுவர்கள் மற்றும் பெண்கள் காலில் பட்டால் அவர்களால் வலி தாங்க முடியாது.சிரமப் படுவர்.எனவே இதை அகற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணினான்.சுற்று முற்றும் தேடினான். ஒரு நீண்ட கழி கிடைத்தது.அதை எடுத்து வந்து முட்கள் அனைத்தையும் அந்த கம்பால் தள்ளிக் கொண்டுபோய்   ஒரு ஓரமாக யாருக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில்  ஒதுக்கி வைத்தான்.அதன் பின்  நடந்து சென்றான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த குரு மூவரையும் அழைத்தார்.இந்த முட்களை பரப்பி வைத்து பரீட்சித்ததே அவர்தானே,! மூவரும் சென்றனர்.
மூன்றாவது இளைஞனிடம் உனக்கு மக்கள் நலன் பற்றிய கவலையும்,  தொலை நோக்கு பார்வையும் மிகுதியாக இருக்கிறது.எனவே அரசனுக்கு உதவியாக அமைச்சரவையில் சேர்த்து கொள்ளும்படி சிபாரிசு செய்கிறேன். மற்ற இருவரிடமும் சுயநலமே மிகுதியாக இருக்குறது.பொது நலன் கொஞ்சமும் இல்லை! இவர்களால் ,மக்களுக்கோ, நாட்டுக்கோ  எந்தவித பயனுமில்லை! எனவே இவர்கள் வீட்டிற்கு ்போகலாம்  என்று கூறினார்..
இப்போது அந்த குரு ஸ்தானத்தில் வாக்காள பெரு மக்கள் இருக்கிறார்கள்.
அந்த மூன்றாவது இளைஞனைப் போல மக்கள் நலனில் அக்கறையும்,தொலை நோக்கு பார்வையும் உள்ளவர்கள்  இப்போதைய அரசியல்வாதிகளில் யார் என்பதை கூர்ந்து பாருங்கள்!

No comments:

Post a Comment