Friday, 24 July 2015

பொய்யும் பொய்யும் சேர்ந்தால் நன்மை என்று அர்த்தம் !

               
படம் கூகுள் 
  நான் வருவாய் துறையில் பணி புரிந்த சமயம்! தமிழ்நாடு  சர்வீஸ் கமிசன் பரீட்சை அடிக்கடி  நடக்கும் ! அதற்கு  பள்ளிகூடங்களில் இடம் வாங்க வேண்டும் ! அந்த காலத்தில் ஒரு நபர் பரீட்சை எழுதுவதற்கு பள்ளிக்கூடத்திற்கு  ஐம்பது பைசா சர்வீஸ் கமிசனில் இருந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்  !
    500 பேர் எழுதினாலும்   250 ரூபாய்தான் கிடைக்கும் ! அதனால் ஸ்கூல் காரர்கள் விரும்ப மாட்டார்கள்  ! பெஞ்சுகளை ஒழுங்கு படுத்தி போட வேண்டும் ! பரீட்சை எழுத வருவதற்கு முன் திறந்து வைக்க வேண்டும் ! அவர்கள் எழுதி முடித்து போகும் வரை காத்திருக்க வேண்டும் !குடி நீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் !இதெல்லாம் முடிந்தபின் திரும்பவும் பென்ச் டெஸ்க் இவைகளை ஒழுங்கு படுத்த வேண்டும் ! இதனால் ஸ்கூலில்  இடம் தர மாட்டார்கள் !ஆனால்  அதிகாரிகள்  எங்களை  விட மாட்டார்கள் !எப்படியாவது வாங்கி வர வேண்டும் என்று உத்தரவு போட்டு விடுவார்கள் ! நாங்கள்  மத்தளம் மாதிரி  இரண்டு  பக்கமும்  அடி வாங்க வேண்டும் !
  கம்பும் ஒடியக்கூடாது பாம்பும்  சாகனும் !சண்டையும் போடக்கூடாது ! சீட்டும்  வாங்கணும் !கயிறு மேல் நடக்கும்  வித்தை மாதிரித்தான் ! நாங்க  சர்க்கஸில் வேலைக்கு  போனால் உடனே  எடுத்துக்குவாங்க ! அவ்வளவு  வேலையும் தெரியும் ! தெரியலையின்னா  வேலை பாக்க முடியாது !
                             
                                         படங்கள் கூகுள் 
           ஆபிசுக்கு பக்கத்திலுள்ள ஸ்கூல்ல  போய்  சீட்  கேக்க போனோம் !சாயந்திர நேரம் !  HM  ஆபிஸ் முன்  நாலைந்து பேர் நின்று  பெசிக்கொண்டு இருந்தனர் ! HM  இருக்காங்களா? என்று  கேட்டோம் ! நாங்க எதற்கு வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டார்கள்  போலும் ! பாம்பின்  கால் பாம்பறியாதா  என்ன?   ஊருக்கு போயிருக்காங்க ! வர ரெண்டு  நாளாகும்  என்றனர் !சரி வந்தவுடன் பார்க்க வருகிறோம் என்று சொல்லி திரும்பினோம்!    எங்களுடன் வந்த ஒருவர் HM  அவர்களுடன்  நிற்கிறார்! உங்களிடம் பொய் சொல்லுகிறார்கள்  என்றார் ! 
  அவர்கள் நம்மிடம்பொய் சொல்லுகிறார்கள் !இனி நாம் வேற ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டியதுதான்  என்று நினைத்து  திரும்ப அவர்களிடம்  " சார்  விஷயம் வேறொன்றுமில்லை !  உங்க  பள்ளிகூட   காம்பவுண்டு  சுவர்  புறம்போக்கில் இருப்பதாக புகார் வந்திருக்கு ! நாளை அதை  அளந்து பாக்க சர்வேயர்  வாரார் !அதை சொல்லிட்டு போகத்தான்  வந்தோம்!'  என்று சொல்லிவிட்டு திரும்பினோம் ! அதற்குள் அவர்கள் நிலவரம் கலவரமாகி விட்டது ! சார் சார் என்று பின்னாலேயே வந்தார்கள் ! சார் எங்களை மன்னிச்சுடுங்க ! நீங்க யாரென்று  தெரியாம பொய் சொல்லிட்டோம் ! இவர்தான் HM !  காம்பவுண்டு சுவர அளந்தா பள்ளிக்கூடம் பேர் கெட்டுடும் ! பிள்ளைகள்  வராது !தயவு செஞ்சு அதை நிப்பாட்டுங்க என்றனர் !  
  சார்! நீங்க சர்க்காரை மதிச்சா சர்க்கார் உங்களை மதிக்கும் என்றேன் !
  உடனே  நாற்காலி  கொண்டு வந்து போட்டு உக்கார சொன்னாங்க ! உங்களுக்கு என்ன உதவி செய்யணும் சொல்லுங்க செய்யுறோம் ! என்றனர் !
 பப்ளிக் சர்விஸ் கமிசன் பரீட்சை எழுத 500  பேருக்கு  அனுமதி வேண்டும் என்றோம் !
  உடனே எழுதி கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுத்து விட்டனர் ! 150 பேருக்கு கிடைக்குமா என்று கவலையோடு போன எங்களுக்கு 500  பேருக்கு 
சீட் கிடைக்க  காரணம் அவங்க சொன்ன பொய்யும் நாங்க சொன்ன பொய்யும் தான்  !
 வள்ளுவர் சொன்னது போல  நாங்கள் சொன்ன  பொய்யும் இந்த இடத்தில வாய்மைதான் !யாருக்கும்  கெடுதல் இல்லை !பல  மாணவர்களுக்கு பரீட்சை எழுதும் நன்மை கிடைத்தது ! வாழ்க சமயோசிதம் !
                                                       
  

No comments:

Post a Comment