படம் கூகுள்
வில்லு பாட்டுகாரர்கள் ஒருபக்கம் கருப்பசாமி கதையை சொல்லிக்கொண்டு இருந்தார்கள்!
மற்றொரு பக்கம் நையாண்டி மேளத்தை வாசித்துக் கொண்டிருந்தார்கள் ! ஓன்று கம்பு ஒடியனும் இல்ல தவுலு கிழியனும் என்று ஆக்ரோசமாக அடித்து துவைத்து கொண்டிருந்தார்கள்! நாதஸ்வரக்காரர்களும், தன் பங்குக்கு குலுக்கள் டான்ஸ் பாட்டுக்களாக வாசித்து ஜனங்களின் காது ஜவ்வை கிழத்துக் கொண்டிருந்தார்கள்! இதற்கெல்லாம் ஈடு கொடுத்து கரகாட்டக் காரிகள் ஆடிக்கொண்டிருந்தர்கள் ! அவர்களை சுற்றி இளைஞா்கள் கூட்டம் !\
கரகாட்டக்காரிகளின் ஜாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்களை குத்துவதில் இளைஞர்களிடையே போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது
படம் கூகுள்
இதற்கு இடையே கூட்டத்தையும் சத்தத்தையும் கேட்டு ஆடுகள் எல்லாம் மிரண்டு போய் மே மே என்று கத்திக் கொண்டிருந்தன ! எல்லாம் முடிந்து ஆடுகள் வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது ! பூசாரி அரிவாளை ஓங்கி பிடித்து கொண்டிருந்தார் !அவர் வெட்டும்போது ஒரே வெட்டில் ஆட்டின் தலை துண்டாக விழ வேண்டும் ! அப்படி ஆட்டின் தலை துண்டாக போய் விழாமல் தொங்கி கொண்டிருந்தால் ஆட்டின் சொந்தக்காரர் குடும்பத்திற்கு கஷ்டம் வரும் என்று ஐதீகம்! அதனால் பூசாரி கனத்த அரிவாளை நன்றாக கூர் தீட்டி வைத்திருந்தார் !
படம் கூகுள்
பூசாரி அரிவாளை சாமி முன் வைத்து கும்பிட்டு ஆடுகளை வெட்டுவதற்கு தயாராக அரிவாளை ஓங்கியபடி நின்று கொண்டிருந்தார் ! ஒவ்வொருவரும் தங்கள் ஆட்டை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள் ! பூசாரி முன்பு இரண்டு ஊர் தலைவர்கள் தங்கள் ஆட்டைத்தான் முதலில் வெட்ட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி கொண்டிருந்தார்கள் !ஒருவர் தன் ஊரில்தான் தலைக்கட்டு அதிகம்! அதனால் தன் ஆட்டைத்தான் முதலில் வெட்ட வேண்டும் என்றார் !அடுத்தவர் தன் ஊர்தான் ஆதி காலம் முதலே இந்த கோயிலுக்கு வருகிறவர்கள் ! எனவே தங்கள் ஊர்தான் பரம்பரையில் மூத்தவர்கள் !எனவே தன் ஆட்டைத்தான் முதலில் வெட்ட வேண்டும் என்றார் ! முதலில் ஒருவர் தன் ஆட்டை நீட்டுவார் !பூசாரி அரிவாளை ஓங்கும்போது இவர் ஆட்டை தள்ளி விட்டு தன் ஆட்டை நீட்டுவார் ! இப்படியே இருவருக்குள்ளும் இழுபறி போட்டி நடந்து கொண்டிருந்தது ! பூசாரி அரிவாளை ஓங்குவதும் இவர்கள் தள்ளு முள்ளை பார்த்து நிறுத்துவதுமாக நேரம் ஓடிக்கொண்டு இருந்தது ! பூசாரிக்கு அருள் கூடிக்கொண்டே இருந்தது! கண்கள் செவ்வசெவேரென மாறி விட்டன ! இறுதியில் அவர் ஒரு முடிவெடுத்தார் ! அரிவாளை ஓங்கி வெட்டுவோம் !யார் ஆடு வெட்டு பட்டாலும் சரி !
அதே போல அரிவாளை எட்டு மட்டும் உயர்த்தி ஒரே வெட்டாக வெட்டிவிட்டார் !
\ கீழே உருண்டு ஓடுயது மனிதனின் தலை !தலைக்கட்டு அதிகம்னு சொன்னாரே அவர் தலை! போட்டியில் நீட்டுபோது ஆட்டின் தலைக்கு மேலாக தன் தலையையும் சேர்த்து நீட்டி விட்டார் !
அவ்வளவு தான்! பூசாரி இந்த பூலோகத்தை விட்டே மறைந்து விட்டார்! அவர் எப்படி மாயமானார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை !பாரம்பரிய ஊர்க்காரர் பாரம்பரியத்தை எல்லாம் விட்டு விட்டு பறந்து விட்டார் !
அங்கிருந்த போலீஸ்காரர் கதவை மூடுங்கள் ! கதவை மூடுங்கள் என்று கூப்பாடு போட்டார் !அவர் கூப்பாட்டை கேட்டதும் மீதம் இருந்தவர்களும் ஒரு கதவை அடைத்து மறு கதவை அடைப்பதற்குள் இடுக்கு வழியே பாய்ந்து பறந்தனர் ! வில்லு பாட்டுகாரர்கள் இந்த வில்லங்கமான வில்லேஜை விட்டு சீக்கிரம் போக வேண்டும் என்று அந்த வில்லையே ஆயுதமாக கீழே ஊன்றி காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்தனர் !குடம் அடிப்பவர் இதற்குதான் அந்த காலத்தில் குடம் கண்டு பிடித்திருக்கிறான் என்று எண்ணி குடத்தை கீழே வைத்து அதன் மேல் ஏறி சுவரை தாண்டி குதித்தார் ! கரகாட்டக்காரிகள் எந்த கிரகத்துக்கோ போய் விட்டார்கள் ! நையாண்டி மேளக்காரர் தன் நிலைமை இப்படி நையாண்டி ஆகிவிட்டதே என்று பதைத்து ஓடி வந்து அந்த மேளத்தோடே சுவரை தாண்டி குதித்து விட்டார் ! தனக்கு இவ்வளவு பலம் இருக்கிறதா என்று அவருக்கே ஆச்சரியம் !நாதஸ்வரக்காரர் பார்த்தார் ! தான் மட்டும் மாட்டிக்கொண்டால் தன்னை நொங்கு எடுத்து விடுவார்கள் என்று பயந்து சுவரில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்த ஒருவன் தலையை மிதித்து ஏறி அந்த பக்கம் குதித்து விட்டார் !
இவ்வளவு களேபரங்களும் நடந்து முடிந்து போலீஸ்காரர் மட்டும்தான் அங்கு இருந்தார் !ஈ, காக்கை கூட அந்த பக்கம் வரவில்லை !
சில நாட்களில் பூசாரி மற்றும் சிலரை கைது பண்ணி விசாரித்தனர்! சில மாதங்கள் கேஸ் நடந்தது ! சாட்சியம் எதுவும் இல்லை என்று கூறி நீதிபதி கேசை தள்ளுபடி செய்து ஒரு உத்தரவு பிறப்பித்தார் ! இனி இது போன்ற நேரங்களில் கூடுதல் போலிஸ் போட்டு வரிசையில் நின்று ஆட்டை வெட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று !
அதற்கு முன்பே அந்த கோயில் நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்மானம் போட்டு விட்டார்கள் ! ஆடு வெட்டுவது கருப்பசாமிக்கு பிடிக்க வில்லை ! அதனால்தான் மனிதனை காவு வாங்கி விட்டார் ! இனி கருப்பசாமிக்கு பலி கொடுக்க கூடாது என்று !
அந்த வருடம் முதல் கருப்பசாமி சைவமாக மாறிவிட்டார் !




No comments:
Post a Comment