Wednesday, 15 July 2015

நாற்காலி செய்த வேலை !

    ஆனந்தம் பிள்ளை  அந்த ஊர் கிராம முன்சீப் ! அந்த நாளில் ஒவ்வொரு கிராமத்திற்கும்  கிராம முன்சீப் , கிராம  கர்ணம்  என இருவர் இருப்பர் !அவர்களுக்கு தெரியாமல் அந்த ஊரில் எதுவும் நடக்காது ! அன்னியர் பதிவேடு என்று ஒரு பதிவேடு இருக்கும் ! அந்த ஊருக்கு புதியவர்கள் யாராவது  வந்தால் அதில் பதியப்படும் ! இப்போது அந்த பதிவேட்டை அன்னியர்கள் கொண்டு போய் விட்டார்கள் போலும் !இப்போது  அந்த பதவிகள் நீக்கப்பட்டு விட்டாலும்  அந்த  காலத்தில் நடந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது !

   ஆனந்தம் பிள்ளைக்கு  என்று அந்த ஊரில்  தனி மரியாதை இருந்தது !அந்த ஊர் பண்ணையார் வீட்டுக்கு போனாலும் அவருக்கு மரியாதை உண்டு ! அவர் இறந்தபின்  அவர் மகன் காசிநாதன் என்பவருக்கு அந்த வேலை கிடைத்தது !அந்த  வேலை பரம்பரை வேலை !காலன் வந்து  கூட்டிக்கிட்டு போகும் வரை அந்த வேலை அவருடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் !  அவர் கண்ணை மூடிய உடன் ஆட்டோமாட்டிக்காக அவர் மகனுக்கு வேலை கிடைத்து விடும் !
  காசிநாதன் வேலை ஒப்புக்கொண்ட்வுடன் மரியாதை நிமித்தமாக  ஒருநாள் சுப யோக சுப தினம் பார்த்து பண்ணையார் வீட்டுக்கு போனார் ! அன்னைக்கு இருவருக்குமே படுபட்சி  சரி இல்லை போலும் ! இவர் போகும் பொது பண்ணையார் ராவணன் அரியாசனத்தில் இருந்தது போல இருந்தார் !ஆஜானுபாகுவான  பண்ணையார் குட்டையாக இருந்த காசிநாதனைப்பார்த்து  ஏளனமாக சிரித்து கொண்டார் ! காசிநாதன் ஐந்து அடிக்கு குறைவான உயரம் ! வயது குறைவு ! பண்ணையார் புடதியில் சனி ஏறி கொண்டதால் காசிநாதனை மதிக்கவில்லை ! இது தெரியாத அங்கிருந்த வேலைக்காரன் ஆனந்தம்பிள்ளைக்கு  போடுவது போல அவர் மகன் காசிநாதனுக்கும் ஒரு நாற்காலியை கொண்டு வந்து போட்டான் !  தீயில் கால் வைத்தது போல பண்ணையார் குதிக்க ஆரம்பித்து விட்டார் ! ஒன்னை யாருலே நாற்காலி போடச்சொன்னது ! அறிவிருக்கா ? சின்னப்பையனுக்கெல்லாம்  நாற்காலி  போடறீயே ! என் முன்னால அவன் உக்காருவானாடா !முட்டாப்பயலே !அவன் நிப்பான் ! நீ போ  என்றார் ! ஊசி சிறுசானாலும் உக்காரும்போது குத்தினால் வலி எப்படி இருக்கும்னு பண்ணையாருக்கு தெரியல !
  சிறுது நேரத்திலே காசிநாதன் திரும்பி விட்டார் ! அதிலுருந்து  வடக்க  தலை வச்சு படுத்தாலும் படுப்பாறே  தவிற  பண்ணையார் வீட்டு பக்கம் தலை வச்சு  படுக்க மாட்டார் !

                                             
  ஒரு நாள் பண்ணையாரின் தகப்பனார் இறந்து  விட்டார் .ஊரே திரண்டு வந்து விட்டது! மாவட்ட அதிகாரிகள் கூட வந்து  மாலை அணிவித்து சென்றார்கள் ! கிராமக் கர்ணமும் ஒரு மாலையை போட்டு விட்டு போனார் !ஆனால் முன்சீப் வரவே இல்லை !
    மாலை ஆறு மணிக்கு பாடியை தூக்க ஏற்பாடு ஆகி கொண்டிருந்தது ! அப்போது இரண்டு  போலீஸ் ஜீப் வந்து நின்றது ! பண்ணையாருக்கு ரொம்ப சந்தோசம் ! நமது தகுதி தெரிந்து மாவட்ட போலீஸே  மாலை போட வந்துட்டார்களே என்று ! சார்  வாங்க  வாங்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் எதிர் பாக்கவே இல்லை என்றார் ! நாங்களும் எதிர் பாக்கலே என்றனர் போலிஸ் ! பண்ணையாருக்கு  ஒன்னும் புரியல ! என்ன சொல்றீங்க என்றார் ! உங்க தகப்பனார் உடலை  போஸ்ட் மாடம் செய்ய கொண்டு போறோம் என்றது போலீஸ் ! பண்ணையாருக்கு சர்வாங்கமும்  நடுங்க ஆரம்பித்து விட்டது !என்ன சார் சொல்றீங்க ?
  அவர் சாவில் மர்மம் இருப்பதாக எங்களுக்கு தந்தி வந்திருக்கு என்றது போலிஸ் 
அப்படி யார் சார் தந்தி கொடுத்தது ?
 உங்க ஊர் முன்சீப்தான்
அப்போதுதான் இதுவரை முன்சீப் வராத மர்மம் புரிந்தது!
அவர் வந்து எழுதி கொடுத்தால் தான் பாடியை எடுக்க முடியும் !இல்லை என்றால் போஸ்ட் மாடம் தான் செய்யணும்
 நாளா பக்கமும் ஆட்கள் பறந்தனர் !முன்சீப்பை கண்டு பிடிக்க முடிய வில்லை !பண்ணையாருக்கு சப்த நாடியும் ஒடிங்கி விட்டது !ஒரு சின்னப்பயல் நம்மை ஆட்டம் காண வைத்து விட்டானே !ஊரெல்லாம் அவரை பார்த்து சிரிப்பது போல அவருக்கு தோன்றியது !
 நேரம் போய்க்கொண்டிருந்தது !போலிஸ் பாடியை போஸ்ட் மாடத்துக்கு கொண்டு போகும் வேலையை தொடங்கியது !
பண்ணையாருக்கு கோபம் ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், செய்வது அறியாது திகைத்து நின்றார் !
  அந்த நேரத்தில் முன்சீபை எங்கிருந்தோ கூட்டிக்கொண்டு வந்து விட்டனர் !
  பண்ணையார் முன்சீப்பிடம் ஒன்றும் கேட்க வில்லை ! போலிஸ் தான் ஏன் சார் இப்படி தந்தி  கொடுத்தீர்கள்? என்று கேட்டது !
   சார் எங்க அப்பா இறந்து எனக்கு வேலை கிடைச்சவுடன்   மரியாதை நிமித்தமாக இவரை பாக்க வந்தேன் ! வேலைக்காரன் நாற்காலி கொண்டு வந்து போட்டான்! இவர் அவனை கோபித்து நாற்காலியை திரும்ப கொண்டு போக சொல்லி விட்டார் ! சார் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் !நான் வகிக்கும்  பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா ? அதான் அவருக்கு பதவி என்றால்  என்ன என்பதை காட்ட நினைத்தேன் என்றார் ! 
   அதன்பின் எல்லோரும் இருந்து பேசி முன்சீபிடமும் , பன்னையாரிடமும் ,ஊர் மக்கள் சிலரிடமும் எழுதி வாங்கி ஒரு வழியாக இரவு பதினோரு மணிக்கு காரியங்கள் முடிந்தன !
  அதன்பின்  பண்ணையார் வீட்டில் அவருக்கு முன் நிரந்தரமாக ஒரு நாற்காலி போடப்பட்டு வி்ட்டது !முன்சீப்பை தவிற வேறு யாரும் அதில் உட்க்கார கூடாது  என்று உத்தரவு போட்டு விட்டார்!
                                                     


No comments:

Post a Comment