Thursday, 16 July 2015

பணம் வந்தாலும் பணிவும் வர வேண்டும்

 

 சும்மாவே  ஆடுபவர் அந்த கிராம முன்சீப் ! காலில் வெந்நீரும்  கொட்டினால்  எப்படி  ஆடுவார் ?  அப்படித்தான்  அன்று நடந்தது !
     அந்த  ஊரில்  சிறு   மில்லும், பெரும் நிலபுலன்களும் உள்ள பண்ணையார்     அவர்  ! மில்லை இவர் பையன்கள் பார்த்து கொள்கிறார்கள் !  இவர்  தோட்டம் துரவுகளை  பார்த்து கொள்கிறார் !கொடுக்கல்  வாங்கலும் உண்டு !வழக்கம் போல தோட்டத்தை  மேற்பார்த்து கொண்டிருந்தார் !சுமார்  நூறு  ஆணும் பெண்ணும் வேலை  பார்த்துக்  கொண்டிருந்தார்கள் ! அந்த  நேரம்  பார்க்க முன்சீப் தலையாரிகளுடன்  வசூலுக்கு வந்தார் ! பண்ணையாருக்கு   சனி  உச்சத்தில் இருந்த நேரம் போலும்  !
  தலையாரிகளில் ஒருவர் போய் பண்ணையாரிடம்   ஐயா !கிராம முன்சீப் வந்திருக்காக  என்றார் ! அவர் ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டார் !
   முன்சீப்போ மரியாதையை  விட்டுக்கொடுக்க மாட்டார் ! தன்னை பார்த்ததும்  எழுந்து நின்று வரவேற்காததோடு , தன்னை உக்காரவும் சொல்ல வில்லை ! அவருக்கு  ரத்த கொதிப்பு டாப்புல ஏற ஆரம்பிச்சது ! ஏற்கனவே கண்ணு இரண்டும் சிவப்பா இருக்கும் ! இப்போது ரொம்ப சிவப்பாயிட்டது !
 கோபமா தலையாரியை பார்த்தார் ! தலையாரி திரும்பவும் பண்ணையாரிடம் போய் ஐயா ! கிராம முன்சீப் வந்திக்காக ! என்றார் ! அப்பவும் கல்லு மாறி
  இருந்தார் ! எந்த  அசைவும் அவரிடம்  இல்லை !
    தலையாரி தானே வந்து சொல்லுகிறான் ! முன்சீப் வந்து தனக்கு வணக்கம்  போடவில்லையே என்று பண்ணையார்  எண்ணியிருக்கிறார்! பண்ணையார்  தனக்கு  வணக்கம் போடலையே என்று முன்சீப் எண்ணி இருக்கிறார் !
 இருவுக்குள்ளும் டக்கப் வார் நடந்து கொண்டிருந்தது !
   மூணாவது தடவையும் தலையாரி போய் சொன்ன போதும் பருவ  நிலை  மாற வில்லை !புயல்  அங்கேயே  மையம் கொண்டு விட்டது !
பார்த்தார்  முன்சீப் !இனி  தன் .அஸ்திரங்களுக்கு  வேலை   வந்து விட்டது என்று எண்ணினார்! தலையாரி  அந்த அரிவாளை எடு  என்றார் முன்சீப் !
பண்ணையார்  பதறி எழுந்தார் !மரியாதையை  எதிர்பார்த்து  மரணத்தை எதிர்  கொண்டு  விட்டோமோ   என்று  உள்ளூர  பயந்தார் ! அரிவாளால் போட்டு விடுவரோ  ? என்று ஓட பார்த்தார் பண்ணையார் !
 அவரை போட்டு விட்டு  ஜெயிலுக்கு போக  முன்சீப் முட்டாளா என்ன ? முன்சீப்  தலையாரியின் கையில் அரிவாளால்  ஒரு கீறு கீறினார் !ரத்தம்  சீறி வந்தது !
பண்ணையாருக்கு தன்னை வெட்டாமல் தலையாரியை  ஏன் வெட்டினார் என்று புரியவில்லை !
அடுத்ததாக முன்சிப் ஒரு வேலை செய்தார் ! தன்னிடமுள்ள ரசீது புஸ்தகத்தை கிழிப்பது போல  பாவனை செய்து ரசீது  புஸ்தகத்தின் அட்டையை இரண்டாக  கிழித்தார் !

 முன்சீப்புக்கு  புத்தி  பிசகி  விட்டதோ  என்று பண்ணையாருக்கு  சந்தேகம் வந்து  விட்டது !
  முன்சீப்பின்  ஒவ்வொரு செய்கையை பார்த்ததும்  பண்ணையாருக்கு  என்ன செய்வது  என்ன சொல்வது ஒன்றும் புரிய வில்லை !  அமாவாசை அன்று   நடு சாமத்தில்  தனியாக    மயானத்தில் நிற்பது  போல  தவித்தார் !
  மூன்றாவதாக ஒரு  பிரம்மாஸ்திரத்தை ஏவினார் முன்சீப் !

  யோவ் !பண்ணையாரே வசூல்  செய்ய வந்த என் தலையாரியை  வெட்டி இருக்கிறீர்  அதுஒரு குற்றம் ! சர்க்கார் வேலையை  செய்ய விடாமல் தடுத்து விட்டீர் ! ரசீது புஸ்தகத்தையும் கிழித்து விட்டீர்! அடுத்ததாக நான் வசூல் செய்து வைத்திருந்த சர்க்கார் பணத்தையும்  புடுங்கி கொள்ளைஅடித்து விட்டீர் !   இந்த நான்கு    குற்றங்களுக்கும்  என்ன தண்டனை தெரியுமா ?    ஏழு வருஷம்  ஜெயில் தண்டனை! உம்மை ஜெயிலை  தள்ளலை  என்றால் என் வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன் என்றார் முன்சீப்!

  பண்ணையாருக்கு  சப்த நாடியும் ஒடுங்கி  விட்டது ! பூனைன்னு புடிக்க போய் அது புலியால்ல இருக்கு  ! எறும்பு  புற்றுன்னு கை விட அது  பாம்பு  புற்றா மாறிட்டுதே   என்று எண்ணினார் !
நா  நேரே போலீஸ்  ஸ்டேசனுக்குதான்  போறேன் ! போலீஸ்  வரும்  ரெடியா இரும் என்று சொல்லி விட்டு முன்சீப்  போய் விட்டார் !
  பண்ணையார்  நிலை  கொள்ளாமல்  தவித்தார் !இன்னைக்கு யார் முகத்தில்  விழித்தோம்  என்று  எண்ணினார் !யார் முகத்தை  சொன்னாலும்  அது வேறு சிக்கல் !
 நேரே கிராம கர்ணத்திடம்  போனார் ! நடந்ததை எல்லாம் சொன்னார் !கர்ணம் வயதில் பெரியவர் !அனுபவஸ்தர் ! பண்ணையார் வருவதற்கு முன்பே முன்சீப் கர்ணத்திடம் நடந்ததை சொல்லி விட்டார் !போலிசுக்கு  போக  வேண்டாம் !நீர் வீட்டில் இரும்  !நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறி அனுப்பி விட்டார் ! அது பண்ணையாருக்கு தெரியாது !
                                               
 இப்போது  பந்து கர்ணம் கைக்கு வந்து விட்டது ! போலிசுக்கு  போனா  பண்ணையாருக்கு மட்டுமல்ல  ஊருக்கே  அவமானம் ! அதே நேரத்தில் இதை  அப்படியே விட்டால் கர்ணம் முன்சீப் இருவருக்கும்  ஊரில்  மதிப்பு இருக்காது !கர்ணம் மனசுக்குள் கணக்கு போட்டார் !
 ஐயா !முன்சீப் ரொம்ப கோபமா இருக்கார் !நான்தான் அவரை போலிசுக்கு போகாமல் தடுத்து வைத்திருக்கிறேன் ! கேசுன்னு போனா ஏழு வருஷம் உள்ள போகணும் ! நீங்க செஞ்சது கடுமையான குற்றம் ! நீங்க என்ன நினைக்கீங்க ன்னு  அவரை ஆழம் பார்த்தார் !
 ஆழம் பாக்க கூடிய நிலையில் அவர் மனம் இல்லை .அது தூர்ந்து போய் விட்டது பூரண  சரண்டர்  நிலையில்  இருந்தார் !நீங்க என்ன சொன்னாலும் நா கேட்டுக்கிடுதேன் ! இனி பஞ்சாயத்து துப்பரவு  தொழிலாளி வந்தாலும் எந்திருச்சு நின்னு வரவேற்பேன் என்றார் !
அதற்கு மேலும் கர்ணம்  அவரை சங்கப்படுத்த விரும்பவில்லை !இதுவே 1 அவர்  ஆயுளுக்கும் போதும் என்று எண்ணினார் !
 அந்த ஊர் அம்மன்  கோயிலுக்கு ரொம்ப  நாளா கோபுரம்  இல்லாமல் இருந்தது இது தான் சமயம் என்று எண்ணி   அந்த  கோபுரத்தை அவர் செலவில் கட்டி கொடுக்க சொல்லி விட்டார் ! .அவரும்  ஆளை விட்டால் போதும் என்று எண்ணி கட்டி கொடுத்து விட்டார் !
  பண்ணையார்  லேசில்  காசை  இளக்க மாட்டார் ! அம்மன் விளையாடிய  விளையாட்டு இது என்று கூறுகிறார்கள்  ஊர்மக்கள் ! 
                                                  

No comments:

Post a Comment