நான் கிராம நிர்வாக அதிகாரியாக பல ஆண்டுகளுக்கு முன்பு பணி புரிந்தேன் ! பல வரிகளுடன் ரெவின்யூ ரெக்கவரி என்று, அதாவது அரசாங்கத்துக்கு வர வேண்டிய பாக்கிகளையும் அரசாங்க துறைகளில் இருந்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கிகளையும் வசூல் செய்ய வேண்டும்! .இதில் பொதுப்பணி துறை ஒன்றிலிருந்து ஒரு ஏழை பெண்ணுக்கு மொத்தமாக ஒரு தொகை வர வேண்டும் என்றும் அது பல மாத காலமாக கொடுக்க படவில்லை என்றும் தெரிய வந்தது !
நான் அந்த பெண்ணை அழைத்து விசாரித்தேன் ! அவளின் கணவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார் என்றும் கல் உடைக்க வெடி வைக்கும் போது ஒரு பெரிய கல் அவர் தலையில் விழுந்து அவர் இறந்து விட்டார் என்றும் தெரிந்தது !அதற்கு நஷ்ட ஈடாக அந்த துறையில் இருந்து அவர் மனைவிக்கு மொத்தமாக ஒரு தொகை சாங்ஷன் ஆகி இருப்பதாக தெரிய வந்தது ! இதற்குத்தான் அவள் அலைந்து கொண்டிருக்கிறாள் .கடைசியாக ரெவின்யூ ரெக்கவரியாக என் கைக்கு வந்து சேர்ந்தது !
அந்த பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள்!சின்ன குழந்தைகள் ! .சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது அவளால் எங்கே படிக்க வைக்க முடியும்? அந்த பெண்ணிடம் பத்து நாட்களில் அந்த பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தேன் ! எனக்கு ஒரே கவலை ! அரசாங்க துறை சம்பந்த பட்டது! வசூல் செய்வது மிகவும் கஷ்டம் ! கல்லில் நார் உறிக்கும் கதைதான் ! மன உளச்சலி்ல் இருந்தேன் ! திடிரென்று ஒரு யோசனை தோன்றியது ! நேரே தாசில்தாரிடம் சென்று "சார் அந்த பெண் வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறாள் .அவளது இரண்டு சிறு பெண்களும் சாப்பாட்டுக்கே வழி இன்றி படிக்க வைக்கவும் முடியாமல் கஷ்டபடுகிறார்கள் ! தலையில் எண்ணை வைத்தே பல மாதங்கள் ஆகி இருக்கும் போல தெரிகிறது அதனால் நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன் ! அதை உங்களிடம் கூறி அனுமதி கேட்க வந்தேன்" என்று அவரிடம் அந்த யோசனையை சொன்னேன்!ஏழைக்கு உதவி செய்வது பெரும் புண்ணியம் ! நீங்கள் தாராளமாக செய்யுங்கள் !நான் வேண்டிய உதவி செய்கிறேன் என்று கூறினார்
அடுத்த மாதம் ஒன்றாம் தேதி நானும் என் நண்பர்களான கிராம நிர்வாக அதிகாரிகள் சிலரும் எங்களிடம் வேலை பார்க்கும் தலையாரிகளும் அந்த அலுவலகத்துக்கு சென்றோம் ! அன்று ஒன்றாம் தேதி! ஆகையால் சம்பளம் வாங்க எல்லோரும் ஆஜராகி இருந்தனர் !
எங்களை கண்டதும் என்ன சார் கூட்டமாக வந்திருக்கிறீர்கள்? என்று அசட்டையாக கேட்டனர் ! "ஒரு ஏழை பெண்ணுக்கு உங்கள் அலுவலகத்தில் இருந்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் ! பல மாதங்களாக அலைந்து கொண்டிருக்கிறாள் ! அதை வசூல் செய்ய வந்திருக்கிறோம்" என்று நான் சொன்னேன் ! அவர் "சார் நாங்கள் எழுதி அனுப்பி இருக்கிறோம் !வந்ததும் கொடுத்து விடுவோம்! அதற்கு சில மாதங்கள் ஆகும்" என்றார் !
நான் உடனே "சார் உங்கள் அலுவலகத்தை ஜப்தி செய்யும்படி உத்தரவு வந்திருக்கறது ! பின்னால் லாரிகள் வருகின்றன ! பத்திரிகைக் காரர்களும் வருகிறார்கள் !இன்று மாலை பேப்பர்களில் உங்கள் அலுவலகம் ஜப்தி செய்த செய்தி வரும்" என்றேன் !
அவ்வளவுதான்! அசால்டாக இருந்த அனைவரும் அலார்ட்டானார்கள் ! அப்பொழுது மொபைல் வரவில்லை ! எனவே தொலை பேசியில் செய்திகள் பறந்தன ! சிறிதுநேரத்திற்குள் சர் சர்ரென்று ஜீப்புகள் பறந்து வந்தன ! எல்லோரும் உள்ளே போய் ஆலோசனை செய்தனர் ! பின்பு என்னை கூப்பிட்டு பத்து நாள் டைம் கொடுக்க முடியுமா என்று கேட்டனர் ! அதற்கு நான் சார் எங்கள் நிலை உங்களுக்கு தெரியாததில்லை ! ஒன்று வசூல் செய்ய வேண்டும்! இல்லை என்றால் ஜப்தி செய்ய வேண்டும்! என்ற நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்றேன் ! மறுபடியும் உள்ளே போய் ஆலோசனை செய்தார்கள் ! யார் யாருக்கெல்லாமோ டோஸ்கள் விழுந்தன !
திரும்பவும் என்னை கூப்பிட்டு "சார் இந்த விஷயம் இதுவரை எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை ! எப்படியாயினும் இன்று மாலை ஐந்து மணிக்கு செக் கொடுத்து விடுகிறோம்" என்றனர் ! ரொம்ப தேங்க்ஸ் சார் என்று கூறி விட்டு தாசில்தாரிடம் விபரத்தை சொன்னேன்!அந்த பெண்ணையும் பிள்ளைகளோடு வரச்சொல்லி தகவல் கொடுத்தேன் !
மாலை ஐந்து மணிக்கு எல்லோரும் அந்த அலுவலகம் சென்றோம் ! முதன்மை அதிகாரி செக்கை தாசில்தாரிடம் கொடுக்க அவர் அதை அந்த பெண்ணிடம் கொடுத்தார் ! அந்த பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கும் படி கூறி வாழ்த்தினோம் !பல வருடங்களுக்கு பிறகு அந்த இரண்டு பெண்களையும் ஒரு விழா நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தது !இரண்டு பேரும் நன்றாக படித்து பெரிய பதவிகளில் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் !



No comments:
Post a Comment