Sunday, 29 October 2017

மலரும் நினைவுகள்!

நான் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய நேரம்.ஒருநாள் தாசில்தார் ஒருவர் மாலையில் வந்து ஜாயிண் பண்ணினார்.உடன் கலெக்டர் மீட்டிங் இருந்ததால் அதற்கு போய் விட்டார். நாங்களும் உடன் போயிருந்தோம்.மீட்டிங் முடிய இரவு ஏழு மணி ஆகி விட்டது. மீட்டிங் முடிந்து வந்த தாசில்தார் பதற்றமாக காணப்பட்டார்.சார்! ஏன் பதற்றமாக இருக்கிறீர்கள்? என்ன விஷயம்? என்று கேட்டோம்.என் ஒய்ப் போன உடன் டிபன் வாங்கி அனுப்பச் சொன்னாள். இந்த நெருக்கடியில் மறந்து விட்டது என்றார்.இவ்வளவு தானா? சார்.வாருங்கள். நாமும் சாப்பிட்டு விட்டு அவங்களுக்கும் வாங்கிச் செல்வோம் என்றோம். ஐங்ஷனில் உள்ள செண்ட்ரல் கபேக்கு சென்று எல்லோரும் சாப்பிட்டு விட்டு அவங்க வீட்டம்மாவுக்கும் பார்சல் வாங்கி சென்றோம்.அவர் வீட்டிற்கு போனதும் நாங்கள் ரிசப்சன் ஹாலில் இருந்தோம்.தாசில்தார் உள்ளே சென்று அவர் வீட்டம்மாவிடம் பார்சலை கொடுத்து விட்டு வந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே ,அவரையும் தாண்டி அந்த பார்சல் வாசலில் போய் விழுந்தது.விழுந்த வேகத்தில் அதனுள் இருந்த டிபன் எல்லாம் சிதறி போயிற்று.
தோனி கூட அவ்வளவு வேகத்தில் பால் வீசி இருக்க முடியாது.
அந்தம்மா சொன்ன நேரத்தில் டிபன் வாங்கி அனுப்ப வில்லையாம்.அந்த கோபமாம்.
தாசில்தாருக்கு முகம் வெளிறி போயிற்று.சார்! எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான். கவலையை விடுங்க என்று சமாதானப் படுத்தினோம். தம்பி! நான் வெளியேதான் தாசில்தார். வீட்டில் மிகக் கேவலம் என்று ஒரு வரியில் முடித்துக் கொண்டார்.அதிலேயே அவரின் மனவலி எல்லாம் தெரிந்தது. அதற்கு மேல் என்னத்தை சொல்ல!!

No comments:

Post a Comment